Saturday, 28 March 2026

நானும் மலையாளிகளும்

மலையாளிகளோடு முதல் பழக்கம் எப்போது ஏற்பட்டது. கல்லூரி தொடங்குவதற்கு முந்தைய நாள் விடுதியில் எனக்கு வழங்கப்பட்ட அறையில் மற்ற இரண்டு பேரும் மலையாளிகள். சரவணன் மற்றும் விகாஷ் இருவரும் செல்வந்தர்கள். 
எங்கள் குடும்ப தொழில் பற்றி சரவணன் அப்பா கேட்டபோது விவசாயம் என்றேன். அது சரவணனுக்குப் புரியவில்லை. அவன் அப்பா க்ருஷி என்று மொழிபெயர்த்துச் சொன்னார். விகாஷ்க்குச் சுத்தமாகத் தமிழ் தெரியாது. 

இவர்களோடு தான் பண்ணையடிக்க வேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் சரவணனுக்கு நல்லா தமிழ் தெரிந்து இருந்தது. மிக குறுகிய நாட்களில் தமிழ் கெட்ட வார்த்தைகள் கூடகற்றுக்கொண்டான்.

கல்லூரியில் முதல் நாளில் துறைத்தலைவர் பேசிய பிறகு, எல்லாத் துறைகளும் கலந்த கலவையாக வகுப்புகள் பிரித்தனர். அதில் எனது வகுப்பிற்கு வந்தது, சரவணனின் நண்பன் ராகேஷ். அவனை ராக்கேஷ் என்று கூப்பிட்டால் "இல்லா" ராகேஷ் என்று திருத்தம் செய்வான். இடைவேளையில் என்ன பேச என்று தெரியாது. மலையை முட்டி நிற்கும் மேகங்களைப் பார்த்து பியூட்டிஃபுல் ஸ்கை என்றான் ராகேஷ், பதட்டமான அந்த நாட்களில் அழகியலை ரசிக்க மனமின்றி உம் என்றேன். 

அறைக்கு வந்தால் சரவணன் ஏதாவது பேசுவான், அரட்டை அடிக்கலாம். விகாஷ் இரவு அறையில் நீண்ட நேரம் படித்துக் கொண்டிருப்பான். அவன் ரொம்பவே இளகிய மனதுடையவன். செடியில் இருந்து கை தவறி இலைகளைப் பறித்தால் கூட கண்களில் ஒத்திவிட்டு தான் கீழே போடுவான். கல்லூரியில் சேர்ந்த 2வது வாரம் வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் வர மூன்று நாட்கள் விடுமுறையில் வீட்டுக்குப் போன விகாஷ் திரும்ப விடுதிக்கு வரவே இல்லை. தினமும் வீட்டில் இருந்தே (திருவனந்தபுரத்திலிருந்து) வர ஆரம்பித்தான். 

சரவணன் எங்களோடு சேர்ந்து பச்சை தமிழனாகவே மாற ஆரம்பித்தான். அப்போது தான் எங்கள் அறைக்குப் புது வரவாக வந்தான் ஆஷிக். ஆஷிக்கும் தமிழ் நன்றாக பேசும் மலையாளி. எங்கள் அறை தரை தளத்தில் இருந்ததால் பக்கெட் வைப்பது, டீ கப் வைப்பது என பலரும் வருவார்கள். சரவணன் மலையாளி என்பதால் ராகேஷ், கெவின், ஸ்ரீராஜ் மூவரும் பெரும்பாலும் ஒன்றாக வருவார்கள். இவர்கள் வருவது சரவணனுக்குத் தொல்லை ஏனென்றால் விக்ஸ் டப்பாவை வாங்கி வழித்து தேய்த்து விடுவார்கள். 

சரவணனுக்கு விக்ஸ் வாசனை இல்லாமல் தூக்கம் வராது. ஆஷிக் எங்கள் அறை தான் என்றாலும் நடுராத்திரியில் வருவான் அல்லது வேறு எந்த அறையிலாவது தூங்கி விடுவான். 

வகுப்பில் தமிழ் வழி மற்றும் மலையாள வழி படித்தவர்களை முதல் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். எனது பக்கத்தில் வந்தது ஜான் ராய், அவனும் மெக்கானிக்கல் என்பது ஒருவகையில் சந்தோஷம் என்றாலும் அவனுக்கும் ஒன்றும் தெரியாது என்பது வகுப்பை சமாளிப்பதில் கடினமாக இருந்தது. பின்னாட்களில் "கூதர" என்று பெயர் பெற்ற ஜான் ராய் நன்றாக பாடுவான். "சிலம்பொலி காற்றே என்ன சிட்டி அடிச்சாட்டே" இந்த பாடலை அவன் தான் பாடி காட்டினான். 

(சிலம்பொலி காற்றே தான் இதை எழுதுவதற்கு காரணம்) இதை ரூமில் சொல்ல, பக்கத்து ரூம் தீபன், ஜான் ராயை ஏல, சிலம்பொலி காற்றே என்று தான் கூப்பிடுவான். ஜான் ராய் கல்லூரி மேடையில் பாடிய "இன்னலே எந்தன் நெஞ்சிலே" எனக்குத் தெரிந்த மலையாளப் பாடல்களில் ஒன்று. 

அடுத்த மலையாளிகள் பிரசாந்த் மற்றும் ஸ்ரீஜித், இவர்கள் இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள். எங்களைப் போல சனி, ஞாயிறு லீவுக்கு ஊருக்கு போகாமல் விடுதியிலே இருப்பவர்கள் அதனால் சிறிது பழக்கம். 

எங்கள் வகுப்பு மலையாளிகளில் அர்ஜூன் மற்றும் விஷ்ணுவிடம் பெரிய அளவில் பேசியது கூட கிடையாது. ராகுல், ரூபேஸ் இருவரும் சரவணின் வகுப்பு என்பதால் ஏதாவது சரவணன் சொல்வான். ரூபேஸ் பேசும் மலையாளம் சுத்தமாக புரியாது. 'மைனா மண்டயன்' என்று கூப்பிட்டால் சிரித்துக் கொள்வான் ரூபேஸ். பேப்பரில் எதுவும் எழுதமாலே கட்டிக் கொடுத்து விட்டு வந்து, நாகராஜன் சார் அதை வாசித்து காட்டச் சொல்ல திரு திருவென முழித்து சம்பவம் செய்தவன் ரூபேஸ். 



"கல் மாங்கா" என்று அழைக்கப்படும் ஷ்யாமும் எங்களோட நன்றாக பேசுவான். என்ன, அவன் பேசுவது புரியாது. அவனுக்கு கல் மாங்கா என்று பெயர் வைத்த தர்மேந்திரனுக்கு பின்னாட்களில் கல் என தொடங்கும் பெயரே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பிரகாஷ்க்கு தமிழ் முகம், லேப் வகுப்புகளில் பேசிக் கொள்வோம். தேர்வுக்கு முந்தைய நாட்களில் விடுதியில் நடக்கும் விரைவு படிப்புகளில் பிரகாஷ் இருப்பான். நவீன் எனக்கு முந்தைய நம்பர் என்பதால் லேப் வகுப்பில் ஒன்றாகச் சேர்ந்து ஏதாவது உருட்டுவது வழக்கம். 

ஆஷிக்கிற்கு வருவோம், ஆஷிக் படிப்பைத் தவிர எல்லாவற்றையும் சிறப்பாக செய்வான். கல்லூரி கிரிக்கெட் லீக் அவனது ஏற்பாடு தான். இரவு இரண்டு மணி வரை உட்கார்ந்து ரொம்ப மெனக்கெட்டு காதல் கடிதம் எழுதியவன். ஆள் குண்டாக இருந்தாலும் செயலில் பயந்தவன். பல்ப் ஹோல்டரில் நாணயம் வைத்து பல்ப்பை மாட்டி ஸ்விட்ச் போட்டால் பியூஸ் அடிக்கும் என சோதிக்க முடிவு செய்தோம். 

ஸ்விட்ச் போட பயந்து ஆஷிக் பின்வாங்க, ஸ்விட்ச் போட்டது சரவணன். நான் வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பிறிதொரு நாளில் இளம் விஞ்ஞானிகள் கூட்டத்திற்கு வந்த பள்ளி மாணவர்களை எங்கள் அறைக்கு அழைத்துப் பேசினோம். ஒரு பையன் நன்றாக வரைவேன் என்றான். ஆஷிக் அந்தப் பையனிடம் வயலில் அறுவடை செய்யும் பெண்ணைப் போன்ற ஓவியம் வரையச் சொன்னான். 

அந்தப் பையனும் வரையத் தொடங்கினான். வரையும் போதே மீசை வார்டன் பற்றி அந்தப் பையன் கேட்க,  ஆஷிக், மீசை அங்க தான் உருட்டிட்டு இருப்பான். எங்க ரூம் பக்கம் வந்தா ஐயா, ஐயானு கைய கட்டி நிப்பான் சின்னப்பய என்று சொல்லி வைத்தான். படம் முடியும் நேரத்தில் வந்த மீசை, பொங்கல் வைத்தார், ஆஷிக் போட்ட படத்தையும் முடித்து வைத்தார். 

கல்லூரி முடித்து சென்னை சென்ற பிறகு எனது மேலாளர் உமா சங்கர் தெலுங்கர். ஆனால் எலக்ட்ரிக்கல் இன்சார்ஜ் சூரஜ் மலையாளி. அடா, அடா என்று அவர் பேசும் மலையாளம் நன்றாக இருக்கும். யேசுதாஸ் பாடிய பாடல் என்று 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாட்டை விரும்பிக் கேட்பார், பாடவும் செய்வார். 

தூசானில் எங்கள் துறைத்தலைவர் அனில் குமார் மலையாளி தான். யாரையும் கடிந்து பேசாதவர். அவர் ஒரு முறை மட்டுமே அந்த எட்டு ஆண்டுகளில் கோபப்பட்டார். அவர் எப்போதாவது தமிழ் பேசுவார். பேச வைக்க சிலர் உண்டு, அவர் தமிழில் ஏதாவது வார்த்தை பேசினால் நானும், பார்ட்னர் ராஜாவும் சிரித்துக் கொள்வோம். ஏனென்றால் அவரை தமிழில் பேச வைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்காக இருந்தது. 

கடைசியாக அஜித், அஜித் எனது சுமைகளை வாங்கி கொண்டு, நிறைய வாங்கியவர். ஆயில் சிஸ்டம் அஜித் எனும் அளவுக்கு புகழ் பெற்றாலும் அஜித்தை மலையாளி என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

No comments:

Post a Comment