நான் கண்ணபிரான், அடுத்த வாரத்தில் வயசு 48 ஆக போகுது. எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பொறியியல் படிப்பை முடித்து கேம்பஸில் செலக்ட் ஆகிவிட்டான். போஸ்டிங்க்கு வெயிட்டிங். இரண்டாவது மகன் பொறியியல் இரண்டாம் ஆண்டு.
தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேப்பர் கடைக்கு சென்று பேப்பர் வாங்கி படிப்பது வழக்கம். தினசரி ஒரே பேப்பரை வாங்க மாட்டேன் அன்றன்று எந்த பேப்பர் பிடிக்குமோ அதை வாங்குவேன். தினமலர், தினமணி, கதிரவன்,தந்தி, தமிழ் திசை என மாறி கொண்டே இருக்கும். பேப்பரை வாசித்து விட்டு, குளித்துவிட்டு, 7.45க்கு அலுவலகம் கிளம்பி விடுவேன்.
நான் டிப்ளமோ முடித்ததும் வேலையில் சேர்ந்து இப்போது 5 கம்பெனி மாறிவிட்டேன். முதலில் வேலை பார்த்த கம்பெனியில் பணி, கையால் வரைந்த வரைபடங்களை ஆட்டோகேட் உதவியால் கணினி படுத்தும் பணி. அங்குதான் ஆட்டோகேட் கற்றேன்.
பிறகு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை கிடைத்தது. சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தது. மற்றவர்கள் சனி, ஞாயிறுகளில் பொறியியல் படிக்க சென்றனர். நான் பழைய கம்பெனிக்கு பகுதி நேர வேலைக்கு சென்றேன். திருமணம் ஆனது. சம்பள உயர்வுக்காக சில கம்பெனிகள் மாறினேன். கடைசி கம்பெனியில் 12 ஆண்டுகள் பணியாற்றி விட்டேன்.
என்னை விட வயதில் சிறிய இஞ்சினியர்கள் தான் எனக்கு வேலை தருவது. பெரும்பாலும் என்னை கேபி சார் என்று தான் கூப்பிடுவார்கள். சிலர் கேபி வாங்க, போங்க என்பார்கள். எனது வேலையை நான் திருத்தமாகவும், தெளிவாகவும் செய்வேன்.
திடீரென்று வந்த 3டி தொழில்நுட்பத்தை கற்க முயன்றேன். ஆனால் வேகமாக செய்ய முடியவில்லை. 3டி தொழில்நுட்பத்தில் வேகம் இல்லை, பொறியியல் படிப்பு இல்லை என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.
வேலை நீக்க கடிதம் என் கைகளை நடுங்க வைத்தது. மனைவி மகன்களிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக பணி நீக்கம் அரசல் புரசலாக பேசப்பட்டது. புரளியாக இருக்கும் என்று தான் நினைத்தேன்.
ஒரு வாரத்தில் கணக்கு முடித்து மொத்த தொகையையும் தந்து விடுவார்கள்.
என்றும் போல் பேருந்து விட்டு இறங்கி இயல்பாக நடந்து செல்ல முடியவில்லை. இன்னும் பத்து வருடங்கள் ஓட்டி இருந்தால் ஓய்வு வயது வந்திருக்கும். டீக்கடையில் நின்று டீ குடித்தேன். இரண்டு இளைஞர்கள் வந்து டீ குடித்து கொண்டே புகைப்பிடித்தனர். என் மகன் வயதை ஒத்தவர்கள்.
மனைவியும் இளைய மகனும் வீட்டில் இருந்தார்கள். விவரத்தை சொன்னேன். மனைவி முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து, புன்னகைத்து கொண்டே வேற வேலை தேடி கொள்ளலாம் என்றாள். இத்தனை ஆண்டுகள் என்னோடு பயணித்தவளின் ஆறுதல் வார்த்தைகள்.
அடுத்த நாள் வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கொண்டேன். 7.45க்கு பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. அலுவலக வேலைகளில் ஆழ்ந்து வேலை செய்தவன் முதன் முறையாக மனைவியின் ஒருநாள் அலுவல்களை பக்கத்தில் இருந்து பார்க்கிறேன்.
தெரிந்த நண்பர்களிடம் வேலைக்கு சொல்லி வைத்தேன். ஒரு வாரம் கடந்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே இருந்தா ஒருமாதிரி இருக்கும், வெளியே எங்கேயாவது போய்டு வாங்க என்றாள் மனைவி. எங்கு செல்வது, நண்பர்கள் கூட பணி நிமித்தமாக அலுவலகத்தில் தான் இருப்பார்கள். ஒருநாள் புறநகர் ரயிலேறி கும்மிடிப்பூண்டி வரை சென்று திரும்பி வந்தேன்.
மற்றொரு நாளில் பேருந்தில் ஏறி பேரம்பாக்கம் வரை சென்று வந்தேன். ஒருமாதம் ஆகிவிட்டது. பழைய கம்பெனியின் மேலாளர் ஒரு கம்பெனியில் சிபாரிசு செய்தார். இண்டர்வியூக்கு சென்றேன்.
12 ஆண்டுக்கு பிறகு ரெஸ்யூம் மாற்றி, பைல் எடுத்து கொண்டு பயத்துடன் ஒரு நேர்காணலுக்கு செல்கிறேன். 3டியில் டூல் டெஸ்ட் வைத்தார்கள். முடிந்ததும் காத்திருக்க சொன்னார்கள்.
என்னோடு ஒரு இளைஞனும் இண்டர்வியூக்கு வந்திருந்தான். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம். சின்ன பையன் மூன்றாண்டு அனுபவம் உள்ளவன்.
எச்ஆர் வந்தாங்க, இருவரிடமும் சொன்னாங்க.டூல் டெஸ்ட ரிவிவ்யூ பண்றாங்க, ஒரு பொசிசன் தான் வேகன்ஸி இருக்கு என்று.
அந்த பையனை பார்த்து உங்களுக்கு ரெபரன்ஸ் யாராவது இருக்காங்களா என்றார். இல்லை என்றான் அந்த பையன்.
காத்திருக்க சொல்லி எச் ஆர் கிளம்பிவிட்டார். அந்த பையன் ரெஸ்ட் ரூம் போக சென்றான். அவனது பைலை பார்த்தேன்.
நான் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். டீக்கடையில் டீ குடித்தேன். எச்ஆர் போன் செய்தார், மிஸ்டர் கண்ணபிரான் எங்கே இருக்கீங்க? என்றார். சார், எனக்கு 3டி செட் ஆகாது, வேகமா வேலை செய்ய முடியாது. அதான் கிளம்பி வந்துட்டேன் என்றேன்.
அந்த பையன் ரெஸ்யூம்மில் பார்த்தேன், என் மகன் பிறந்த ஆண்டில் தான் அவனும் பிறந்திருக்கிறான்.
No comments:
Post a Comment