இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் என்றால் முத்துலிங்கம், காசி ஆனந்தன், வ.ஐ.ச. ஜெயபாலன் என்று ஒரு சிலரே தமிழ்நாட்டில் அறிமுகம் ஆனவர்கள்.
ஆனந்த விகடனின் தனித்தன்மை குறைந்த போது எனக்கு வாசிக்க பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. பின்பு இலக்கிய இதழான தடம் என்னை கவர்ந்தது. தடம் பல இலங்கை எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் தான் வாசு முருகவேல். நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த கலாதீபம் லொட்ஜ் நாவலை இப்போது தான் வாசித்தேன்.
கொழும்பில் இருக்கும் அந்த லாட்ஜில் ஒரு வாரம் தங்க வைத்திருந்தார் வாசு.
வலி மிகுந்த கதையில் நகைச்சுவை இழைந்தோடும் தொனியில் அவரது எழுத்து ரசித்து வாசிக்க வைக்கிறது.
கனகராசா சங்கரின் டைரியில் கதை தொடங்கினாலும், கதையின் நாயகன் சந்திரனே.
இலங்கை தமிழை புரிந்து கொள்ள சற்றே பழக வேண்டி இருக்கும். தமிழின் சிறப்பான சிறப்பு 'ற' கரத்தை இலங்கை தமிழர்கள் அழகாக அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
நான் மேன்ஷனில் தங்கி இருந்தாலோ என்னவோ கதை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. போலிஸ் வந்தால் கலையும் அந்த கிரிக்கெட் ரசிக்க வைக்கிறது.
விசாகர் பெயருக்கு அவ்வளவு விளக்கம் கொடுத்து விட்டு பெயரே இல்லாமல் வரும் கதாபாத்திரங்களான பொறுப்பு மற்றும் கொழும்பண்ரி மகன் என ஈர்க்கிறார் வாசு.
பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் பலமுறை கேள்விபட்டிருந்தாலும் பிரேமதாசா யார் என்பது இந்த நாவல் மூலமே தெரியும்.
பழம் விற்கும் தர்மபால பாத்திர படைப்பு அற்புதம். கருப்பு கோட்டை அணிந்து தர்மபால "தாயாய் பத்து ரோபா" என கூவுவது கண்ணில் காட்சியாக விழுகிறது.
கனமான எழுத்து வாசு முருகவேலின் எழுத்து. வாசித்து பாருங்கள். விசா இல்லாமல் இலங்கை சென்று வந்த அனுபவம்!!!
No comments:
Post a Comment