முன் குறிப்பு :
[ஐபிஎல் என்பது க்ளப் கிரிக்கெட், தமிழ்நாட்டுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உள்ள ஒரே தொடர்பு சேப்பாக்கம் மைதானம் மட்டுமே என்ற புரிதல் எனக்கு உள்ளது. ]
தோனியின் 5வது ஒருநாள் போட்டியான விசாகப்பட்டினம் போட்டியில் இருந்தே தோனியின் ரசிகன் தான். தோனியின் முடிவுகள், வியூகங்கள் என அனைத்தையும் ரசித்தவன்.
ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. தோனி செய்து தவறுகள்.
தோனிக்காக, பிசிசிஐ அன்கேப்டு வீரர்கள் விதிமுறையை மாற்றியது. அதில் தோனி தவறேதும் இல்லை. ஆனால் சிக்கியது தோனி.
சேவாக் முதலிலே சொன்னது, தோனிக்கு வயதாகி விட்டது, ஓய்வு பெற்று விடலாம் என்றார். அதை தோனி செய்து இருக்கலாம். ஒரு பெரிய வீரர் 9வது வீரராக பேட்டிங் இறங்குவது எவ்வளவு பெரிய அசிங்கம்.
தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம். தோனி தவிர வேறு ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் தமிழராக இருந்தால் நலம் என்பது நிதர்சனம்.
அதற்காகவே இந்த முறை ஏலத்தில் அஸ்வின், விஜய் சங்கர், சித்தார்த், குர்ஜப்நீட் என தமிழ்நாடு வீரர்களை அதிக அளவில் எடுத்தது சிஎஸ்கே. ஆனால் ருதுராஜ்க்கு காயம் என்றதும் மீண்டும் தோனி கேப்டனானது அபத்தம். அஸ்வினையோ அல்லது ருதுராஜ்க்கு அடுத்த இடத்தில் வேறு ஒருவரையோ உருவாக்க வேண்டியது தானே ஒரு சீனியரின் கடமை.
முதல் உலகக் கோப்பை வென்ற போது தோனி சொல்லியது, ஹர்பஜனிடம் கடைசி ஓவர் வீசுவதற்கான தன்னம்பிக்கை இல்லை. அதனால் ஜோகிந்தரை பந்து வீச வைத்தேன் என்று. அதே தோனி லெக் ஸ்பின்னருக்கு பயந்து பயந்து ஆடுகிறார் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தோனி லெக் ஸ்பின்னரை தைரியமாக எதிர் கொள்ளவே இல்லை.
ஒரு காலத்தில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றார் தோனி. அதே தோனி திரிபாதி, துபே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, பதிரான இவர்களிடம் என்ன ஸ்பார்க் கண்டார்?
வியூகங்கள் சிறப்பாக அமைக்கும் தோனி, ஏன் தீபக் ஹூடா, விஜய் சங்கர், துபே போன்றோருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச முயற்சிக்கவில்லை. பவர் ப்ளேவில் கலீல், பத்தாவது ஓவர் பதிரான என ஏன் கடிவாளம் போட்ட குதிரையாக செயல்பட்டார்?
பதிரான சில நிமிடங்களுக்கு பந்து வீச முடியாது என்றதும் சில நிமிடங்கள் அம்பயரிடம் பேசி நேரம் கழித்தார் தோனி (கேவலமான யுக்தி). அதே தோனி அணியில் ஒருவர் டிஆர்எஸ் நேரம் கூட தெரியாமல் இருப்பது அவ்வளவு பெரிய அபத்தம்.
தோனி தலைமையிலான அணி சிக்ஸ் அடிக்க வேண்டிய நேரத்தில் கூட சிங்கிள் ஆடுவது, கையில் இருந்த போட்டியை கோட்டை விடுவது என்பது மோசமான கேப்டன்சியின் வெளிப்பாடு.
எதிரணி, தோனி அணி வீரரை அவுட் ஆக்காமல் விட்டால் ஜெயிக்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளது. (விஜய் சங்கருக்கு கேட்ச்களை விட்ட டெல்லி அணி, ஜடேஜாவுக்கு கேட்ச்களை விட்ட பெங்களூரு அணி). இது போன்ற கையாலாத வீரர்களை கூட அணியில் வைத்திருக்கும் அளவுக்கு தோனியை இயக்குவது யார்?
பின்குறிப்பு : ஒரு தோனி ரசிகனாக எனது தனிப்பட்ட கருத்து இது.