Wednesday, 30 April 2025

அஜித் குமார் 1

1. என் வீடு என் கணவர்

அரை நிமிட காட்சி தான்

திரையில் அறிமுகத்தை தந்தது !

தோப்புக்கரணம் போட்டு 

மன்னிப்பு கேட்பார் அஜித் !

அன்று தெரியாது 

அவருக்கு பின்னால்

ஒரு பெருங்கூட்டம் கூடும் என்று !!!



2. அமராவதி 

செல்வா இயக்கத்தில் 

அர்ஜூன் என்ற பாத்திரத்தில் 

அறிமுகம் !

உதடசைவுக்கு ஒலி

கொடுத்தவர் விக்ரம் !

அமராவதி தான் அஜித்

எனும் நதியின்

தொடக்கப்புள்ளி !!!



3. ப்ரேம புஸ்தகம் 

துறைமுகத்தில் படப்பிடிப்பு 

அலைகளில் சிக்கிய

இயக்குநர் இறந்துவிட

மகனின் ஆசையை

நிறைவேற்ற தந்தை 

இயக்கிய படம் !

பெற்றோர்களால் கைவிடப்பட்ட

இளம் காதலர்கள் 

பற்றிய கதை !

அஜித் குமாரின்

நேரடி தெலுங்குப் படம் !!!



4. பவித்ரா

அன்னை பாசத்தை

அறியாத ஒருவன்

பிள்ளையில்லா தாயொருத்தி

இருவருக்குமான பிணைப்பு !

நோயின் பிடியில் இருப்பவன்

செய்யும் மோட்டார் சைக்கிள் 

சாகசம் !!!



5. பாசமலர்கள்

குமார் என்ற குட்டி பாத்திரம்

அஜித் குமாருக்கு !

அரவிந்த் சாமி படத்தில் 

சின்ன பாத்திரத்தில் 

நடித்த அஜித்

பின்னாளில் அரவிந்த் சாமியை

விட பேர் பெற்றார் !!!



6. ராஜாவின் பார்வையிலே 

காதல் தோல்வியால் தற்கொலை

செய்து கொள்ளும் சந்துரு !

சந்துருவின் நண்பன் ராஜா !

சிறிய கதாபாத்திரத்தில், 

ஒரே ஒரு காதல் தோல்வி

படம் இது தான் !!!



7. ஆசை

143 என்று காதலை சொல்வது 

காதலிக்கு நாய்க்குட்டி 

பரிசளிப்பது என

காதலும் காதல் சார்ந்து !

மச்சினிச்சி  மீது ஆசை

வைத்துள்ள வில்லன் !

அஜித் குமாரை ஆசை 

நாயகனாக மாற்றிய

முதல் பெரிய வெற்றி படம் !!!







Sunday, 27 April 2025

நாறும்பூநாதரும் ஒரு நாரும்

எழுத்தாளர் நாறும்பூநாதன் ஐயா அவர்கள் பற்றி நண்பர் சேதுபாலா எழுதிய புத்தகம்.



நண்பர் சேதுபாலா எழுதிய 96 வெண்பா புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. காரணம் 96 படத்தை முழுமையாக ஒருமுறை பார்த்தால் வாசிக்க சுவராஸ்யம் இருக்கும் என்பதால்.

நாறும்பூநாதன் ஐயாவை நான் எழுத்தாளர் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, பொதுவுடைமை சிந்தனையாளர், சமூக சேவகர் என்று பன்முகம் கொண்டவர் என்பதை காலச்சுவடு இதழில் வந்த அஞ்சலி கட்டுரையில் தெரிந்து கொண்டேன்.

சேது போல நானும் தேனி புத்தகத்தை வாசித்த பிறகு தான் ஐயாவின் திருநெல்வேலி புத்தகத்தை வாசித்தேன். முதலில் அந்த புத்தகம் வாங்க எனக்கு ஆர்வம் இல்லை. விற்பனைதளத்தில் கிறிஸ்து ராஜா பள்ளியில் யேசுநாதர் கைகளை விரித்து நிற்கும் சிலை பற்றி ஐயா எழுதியது இருந்தது. அந்த வரிகளே புத்தகத்தை வாங்க வைத்தது.

இந்தப் புத்தகத்துக்கு வருவோம். சேதுவுக்கும் நாறும்பூநாதன் ஐயாவுக்குமான சந்திப்புகள் உரையாடல்கள் தான் இந்தப் புத்தகம். சேது திருநெல்வேலி புத்தகம் குறித்து ஐயாவிடம் கேட்ட கேள்வி, அதற்கான பதில், ஐயாவின் குணத்தை காட்டுகிறது. சேதுவின் கேள்விக்கு என்னிடம் ஒரு பதில் உள்ளது. லூர்து நாதன் பற்றி ஆண்டுதோறும் செய்தித்தாள் நெல்லை பதிப்பில் தகவல் வரும். கிளாரிந்தா, ரெய்னிஸ் ஐயர் பற்றி யார் சொல்வார்கள்?. ஐயாவின் புத்தகம் தான் வழிகாட்டியாக உள்ளது.

திருநெல்வேலி வெள்ளத்திற்குப் பிறகு ஐயா ஆழிக்குடி கிராமத்திற்குச் சென்று ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இன்னும் நினைவில் உள்ளது. சேது மூலமாக ஐயாவை சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் காலத்தின் கணக்கு வேறாகிவிட்டது.

சேதுவின் எழுத்துக்களின் மூலம் நாறும்பூ ஐயா, இளைஞர்களை எப்படி ஊக்குவித்தார் என்று தெளிவாக தெரிகிறது. ஆறுபதிலும் இளைஞரின் துடிப்புடன் வலம் வந்த இலக்கிய ஆளுமையை அள்ளிக் கொள்ள காலனுக்கு எப்படி மனது வந்ததோ?அஞ்சலியை எழுத்தின் மூலமாக செய்திருக்கும் சேதுவுக்கு பாராட்டுக்கள்.

நாறும்பூ மணக்க....