"நண்பர்களோடு ஒரு சந்திப்பு
"தவளக்கொடி" அன்பரோடு இரவு உணவு"
என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும்.
ஜெர்மனியில் இருந்து வந்திருந்த கணபதி சந்திக்கலாம் என்று சொல்ல, தானாய் சேர்ந்தது கூட்டம்.
டேனி வீட்டில் சந்திப்பு, கணபதி, டேனி வீட்டிற்கு வந்து விட, நானும் பழனி சங்கரும் கூகுள் மேப்பால் குழம்பி நிற்க டேனியே அழைத்துச் சென்றான். கொஞ்ச நேரத்தில் செல்வகுமார் வந்தான். கணபதி மகன் சுதீஷ் அமைதியாக உட்கார்ந்து இருந்தான். வெளியே போய் இருந்த டேனி மகன்கள் எடி, ஈத்தன் வீடு திரும்ப ஆட்டம் களை கட்டியது.
கடைசியாக தான் வந்தார் கார்த்திகேயன் (விநாயக்) கூடவே பட்டத்து இளவரசர் மோனிஷ்ம். [கல்லிடைக்குறிச்சி பேரரசர் பேருந்தில் வந்ததால் இளவரசுளைக் கூட்டி வரவில்லை. ஜங்ஷன் மன்னர் செல்வகுமாரும் தனது குமாரரைக் கூட்டி வரவில்லை. எங்களது இளவரசிக்கு நகர்வலம் பிடிக்காது.]
டேனி மகன் எடியை காட்டிலும் மற்ற குழந்தைகள் சிறுவர்கள் என்றாலும் நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்று விளையாட்டில் இணைந்து கொண்டான்.
டேனி வெடி போடுவோம் என்று சொல்ல, இதுவரை வெடி போட்டு ஏற்பட்ட விழுப்புண்களை மறந்து வீரபராக்கிரமத்தோடு நான் வெடிக்காத வெடியை குட்டீஸோடு வைக்க ஆரம்பித்தேன். லட்சுமி வெடியை கார்த்தியும், தாவும் தவளை வெடியை கணபதியும் வைத்தார்கள். டேனி போட்டோ எடுக்க, செல்வகுமாரும், பழனி சங்கரும் வேடிக்கை பார்த்தனர்.
கனடாவில் வசிக்கும் டேனி மகன்கள், ஜெர்மனியில் வசிக்கும் கணபதி மகன், தூத்துக்குடியில் வசிக்கும் கார்த்தி மகன் இவர்களை இணைத்தது எங்கள் நட்பு. அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்ள எங்களுக்கு தான் எந்த மொழியில் பதில் சொல்வது என்ற குழப்பம். ஈத்தன் - மோனிஷ் ஆட்டம் சச்சின் - சவுரவ் ஆட்டம் போல இருந்தது.
எடி, எங்கள் பெயர்களை டேனியிடம் கேட்க இது செல்வகுமார், இது பழனி செல்வகுமார், இது பழனி சங்கர் என்று சொல்ல ஒரே மாதிரி பேரா இருக்கு, போதும்டா சாமி என்று விலகிக் கொண்டான்.
சாப்பிட கிளம்ப முடிவுவானதும், இளவரசர்களை அழைத்துக் கொண்டு வைர மாளிகையில் நுழைந்தோம். அசைவ உணவுகளுக்கு மத்தியில் சைவத்திற்கும் வழி கிடைத்தது.
உண்டு, களித்து, பேசி வெளியேறினோம். கூடடைதல் நினைவுக்கு வர கூட்டத்தை கலைத்தோம். மீண்டும் சந்திப்போம். ஆனால் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு?
சரி, அந்த தவளக்கொடி - டேனியின் 2வது மகன் முதல்வரின் தீவிர ரசிகர். முதல்வர் பாட்டான "தமிழர்கொடியை" தவளக்கொடி என்று பாடித் திரிந்தான். உதித் நாராயணன் பாடி இருந்தாலும் அப்படி தானே இருக்கும்.
Wonderful post..I hope when my kid grow up he get a chance to read this post and recollect the moments that they shared...
ReplyDeleteIt was so heart touching...
--Sudheesh Amma
மிக்க நன்றி 🙏
Delete