Sunday, 31 August 2025

ககக -6

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் என்ற தகவலை கேட்டதும் கபில் சர்மா மகிழ்ச்சி அடைந்தார். பல்விந்தர் சிங்கிடம் பேசினார். பல்விந்தர் சிங் ஒரு எச்சரிக்கை விடுத்தார், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கலவரங்கள் மீண்டும் வரும் சூழல் உள்ளது கவனமாக இருக்கவும் என்று.

திருநெல்வேலிக்கு வந்த மூன்றாம் நாளே பாளையநல்லூர் கிராமத்தில் அரிவாள் வெட்டு என்ற செய்தி உதவியாளர் மூலம் கபில்சர்மாவுக்கு வந்தது. சார், நாம அரசு மருத்துவமனைக்கு போய் வெட்டுப்பட்டவரை பார்க்க போறோமா எனறார் உதவியாளர். புரோட்டாகால்படி அரசியல்வாதி போகும் போது கூட போவோம் என்றார். 

கலெக்டர் அலுவலக இளம் உதவியாளர் ஒருவரை அழைத்து, எனக்கு இந்த பாளைய நல்லூர் கிராமம் எப்படிஇருந்துச்சுனு முழு வரலாறு வேணும். இரண்டு நாளில் ரெடி பண்ணுங்க. இந்த இரண்டு நாள் நீங்க வேற வேலை பார்க்க வேண்டாம் என்றார் கபில். 

அடுத்த நாள் மாலையே அலுவலக உதவியாளர் வந்தார். விளக்கி சொல்ல ஆரம்பித்தார். சார், சுதந்திரம் அடைஞ்ச டைம்ல அங்க ஒரு பெரிய குளம் இருந்திருக்கு. அப்புறம் அந்த குளத்தை தனியார் கல் குவாரியா மாத்தி, புது குளம் தோண்டி கொடுத்து இருக்காங்க. அந்த பகுதியில் இருந்தவங்க கல் குவாரியில் வேலை பார்த்து இருக்காங்க. 

அப்புறமா கவர்மென்ட் ஒரு சாராருக்கு வீடு கட்டி கொடுத்து இருக்காங்க. அது வடக்கு பக்கமா, அதுக்கு அப்புறம் அந்த ஊர் தெக்கூர், வடக்கூர்னு வேற ஜாதியினர் ஊரா மாறி இருக்கு. 

சமீபத்தில் கல் குவாரியில் போதுமான அளவு கல் இல்லாததால் அந்த தனியார் கம்பெனி அதை மூடிட்டாங்க. இப்போ அந்த ஊர்காரங்களுக்கு வேலை இல்லை. 

ஒரு வண்டி மட்டுமே போகக்கூடிய சின்ன பாலத்தில் இரண்டு பிரிவினர் டிராக்டர்கள் எதிர் எதிரே வர யார் வழிவிட வேண்டும் என்பது சண்டையாகி வெட்டு குத்து வரை போய் இருக்கு சார் என்றார் உதவியாளர். 

கபில் சர்மா நாளைக்கு நான் பாளையநல்லூர் போறேன் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க என்றார் உதவியாளரிடம். 

கபில் பாளையநல்லூர் சென்று ரெண்டு பகுதிக்கும் நடுவில் இருந்த சின்ன கோவிலில் வண்டியை நிறுத்தினார். மரியாதையுடன் வெறும் காலோடு  சென்றார். கலெக்டர் வருவது யாருக்கும் தெரியாததால் பெரிய பரபரப்பு இல்லை. 

ஒரு பாட்டி மட்டுமே அங்கே இருந்தார். கபில் இந்த சாமி பேர் என்ன என்று பாட்டியிடம் கேட்டார். இவர் கசமாடன், அது அம்மன், அவரு காவல் மாடன். அந்த சாமி மட்டுமே ஏன் தனியா தள்ளி இருக்கார் என்று கேட்டார் கபில். 

அவர் வண்ணார் சாதி தம்பி என்றார் பாட்டி. சாமியிலும் சாதியா என்று நினைத்து கொண்டார் கபில். பாட்டி இங்க உங்களுக்கு இருக்கிற பிரச்சினை என்ன என்று கேட்டார். எங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடா இருக்கு. தண்ணி ஏற்பாடு பண்ணுங்க தம்பி என்றார் பாட்டி. 

ஊர்காரர்கள் வந்துவிட்டனர். கல் குவாரியில் வேலை போனவர்களுக்கு, மில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார் கபில். பாலத்தில் மேற்கில் இருந்து வரும் வாகனம் விலகி வழிவிட வேண்டும் என்றும் கூறினார். 

குடிநீர் பிரச்சினை பற்றியும் பேசினார்கள். பாளையநல்லூரில் பாறைகள் அதிகம் என்பதால் ஆழ்துளை கிணறு அமைப்பதிலும் சிக்கல் என்றனர். ஊர் பெருசு ஒருவர் முன்வந்து கசமாடன் கண் எதிரே இருக்கும் இடத்தில் நல்ல ஊற்று இருக்கும் என்றும் ஆழ்துளை கிணறு அமைக்க கசமாடன் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறினார். 

கபில் அவரிடம் ஊற்று இருக்கானு பார்ப்போம். இருந்தால் கசமாடனுக்கு என்ன பரிகாரமோ அதை செய்து போர் போடலாம் என்றார். ஊரும் சரி என்றது. அன்று இரவு அங்கேயே தங்கினார் கலெக்டர். மறுநாள் பேப்பரில் செய்தி வந்தது. கலவரம் வராமல் இருக்க பாளையநல்லூர் கிராமத்தில் இரவு முழுக்க தங்கிய கலெக்டர். என்னய்யா வந்த உடனே ஹீரோயிசமா என்று அமைச்சரிடமிருந்து போனும் வந்தது. 

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் சோதனை நடத்திய போது பெருசு சொன்னது உண்மையானது. ஆனால் இன்னொரு பிரச்சினை கிளம்பியது. அந்த இடம் வடக்கூருக்கு அருகில் இருப்பதால் தெற்கூர்காரர்கள் தங்களது தனியாக ஆழ்துளை கிணறு மற்றும் நீர்தேக்க தொட்டி வேண்டும் என்றனர். தெற்கூர் பகுதியில் நீரோட்டம் பார்க்க உத்தரவிட்டார் கலெக்டர். 

கலவரம் நடக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட கலெக்டரை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர். அந்த மீட்டிங்கின் போது அமைச்சர், கலெக்டரிடம் சொன்னது. பாளையநல்லூர் தெற்கூரில் வெறும் பாறைகள் இல்ல, கனிம வளம் கொட்டி கிடக்கிறது. அவர்களை வேறு பகுதிக்கு அனுப்பி விட்டால் கனிம வளங்களை எளிதில் எடுக்கலாம் என்றார். கபில் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உனக்கு வேண்டியது வரும் யோசிச்சு முடிவெடு என்றார் அமைச்சர். 

கபிலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கனிம வளம் பற்றிய செய்தியை சமூக ஆர்வலர்களுக்கு தெரிவித்தார். 

கசமாடனுக்கு பரிகாரம்செய்யும் நாளில் கலெக்டரும் அழைக்கப்பட்டார். அமைச்சர், எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். அன்றிரவு அங்கேயே தங்கி மக்களோடு பேச முடிவு செய்தார் கலெக்டர். 

இரவு கசமாடன் கோவில் அருகில் காத்தாட அமர்ந்தார் கலெக்டர். அப்போது முகத்தில் துணி கட்டி வந்த கும்பல் கபிலை வெட்டி சாய்த்தது. ஊரும் கலவர முகம் கொண்டது. 

மறுநாள் சாதி வெறியர்களால் கலெக்டர் வெட்டி கொல்லப்பட்டார் என்று செய்தி வந்தது. 

கசமாடன எதிர்த்து போர் போட்டு இப்படி உயிர விட்டுட்டாரே கலெக்டர் என்று கதறி அழுதார் ஊர் பெருசு. ஊர் மொத்தத்தையும் கைது செய்தனர். இரண்டு பிரிவினரையும் வேறு வேறு இடங்களில் குடி அமர்த்த வேண்டும் என்றது நீதிபதிகள் குழு. 

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை குழு அதிகாரியாக ரஞ்சிதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். 

Wednesday, 27 August 2025

பிள்ளையார்

 எல்லா கோவில்களிலும்

உண்டியலுக்கு பாதுகாப்பு

தேவை

பிள்ளையார் கோவிலில்

பிள்ளையாருக்கும்!!! 

****

களிமண்ணுக்கும்

சாணிக்கும் 

தன் உருவம் தந்து

கடவுளாக்குபவர் 

யாணைமுகத்தான்!!! 

****

பிள்ளையாருக்கும் சுண்டெலிக்குமான

இடைவெளியில் பலகாரங்களால்

நிரப்பி விடுகிறார்கள்

அவருக்கோ கொழுக்கட்டை

மட்டுமே விருப்பம்!!! 

****

அருகம்புல்லை

அற்புதமான பொருளாக்கிய

கனவான்

இந்த கணபதி!!! 

****

இவருக்கு சிதறு 

தேங்காய் பிடிக்க

தேங்காய்கடைகாரர் 

காட்டில் மழை

பெரிய பிள்ளையார்

கோயில் அருகில் இருக்கும்

சிறிய உணவகத்தில்

எப்போதும் கெட்டு போகாத

சட்னி கிடைக்கிறது!!! 

****

பக்தர்களை தன் கையால்

தலையில் குட்டி கொள்ள

வைக்கும் வல்லமை

உள்ளவர் இந்த

விநாயகர்!!! 

****

முதற்கடவுள் தான்

இவர் சன்னதியில்

அர்ச்சனையும் குறைவு 

வருமானமும் குறைவு

என்கிறார்

பிள்ளையார் சன்னதி

அர்சகர்!!! 




Tuesday, 26 August 2025

நீண்ட தூர/நேரப் பேருந்துகள்

நெல்லையில் நகரப் பேருந்தில் தனியார் பேருந்துகள் அதிகம். தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் புழக்கத்தால் பொது போக்குவரத்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மேலும் மகளிர் இலவச பேருந்து தனியார் பேருந்துகளை முடக்கி விட்டது. மேலும் தனியார் பேருந்துகளின் அராஜகம் அதிகமாகி உள்ளது. கட்டண உயர்வு, பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்/ஏறும் முன் பேருந்தை இயக்குவது, அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் சண்டை போடுவது என. 

நெல்லையில் நீண்ட தூரத்திற்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் பற்றியும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் பார்ப்போம். 

35 - நெல்லை சந்திப்பு - வடக்கு செழியநல்லூர் / ராஜா புதுக்குடி

Antony பஸ் கம்பெனியின் SK பஸ், ஜங்ஷனில் இருந்து வடக்கு செழியநல்லூர் செல்லும். ஜங்ஷனில் இருந்து ராம் தியேட்டர், தச்சநல்லூர், தாழையூத்து, கங்கை கொண்டான் வழியாக செல்லும். கங்கை கொண்டானுக்கு பிறகு சன்னது புதுக்குடி வரை மதுரை நெடுஞ்சாலையில் சென்று பிறகு இடது புறம் திரும்பி கிராமச் சாலையில் வடக்கு செழியநல்லூர் வரை செல்லும். இத்தி குளம், காந்தீஸ்வரன் புதூர், வடக்கு செழியநல்லூர்,  மேட்டு பிராஞ்சேரி போன்ற கிராமங்களுக்கான பேருந்து. திரும்பி வரும் போது மீண்டும் மதுரை நெடுஞ்சாலையில் சென்று வலது புறத்தில் உள்ள ராஜா புதுக்குடிக்கும் சென்று வரும் பேருந்து. தச்சநல்லூர் - தாழையூத்து மற்றும் தாழையூத்து - கங்கை கொண்டானுக்கு இடையில் உள்ள சின்ன ஊர்களுக்கு இந்த பஸ் ஆதாரம். 

33A -தெற்கு செழியநல்லூர் - ஹைகிரவுண்ட்

ஹைகிரவுண்ட்டில் இருந்து மார்கெட், ஜங்ஷன், தாழையூத்து, தென்கலம் வழியாக தெற்கு செழியநல்லூர் வரை செல்லும் Antony பஸ். 

தாழையூத்துக்கு அடுத்துள்ள  சங்கர் பாலிடெக்னிக், தென்கலம், தென்கலம் புதூர், நல்லம்மாள்புரம், பல்லிக்கோட்டை, அலவந்தான் குளம், நெல்லை திருத்து மற்றும் தெற்கு செழியநல்லூர் ஆகிய கிராமங்களுக்கான பேருந்து. ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் நுழையும் போதே கூட்டம் நிறைந்து விடும். இந்த ஊர்களில் தென்கலம் மட்டும் வித்தியாசமான ஊர். மற்ற கிராமங்கள் விவசாயம் சார்ந்தவை. தென்கலம் கிராம நிலையை விட்டு உயர்ந்து விட்டது. ஆனால் நகர் அஸ்தஸ்தை எட்டவில்லை. முழுக்க வியாபாரம் சார்ந்த ஊர். பீடித்தொழில், அவுரி, பருத்தி, மிளகாய் வத்தல் வியாபாரம் பெருமளவில் நடக்கும். குறுகலான சாலைகள் இந்த சாலைகளில் ஒரு பேருந்து மட்டுமே செல்ல முடியும். எதிரில் வேறு பேருந்து வந்தால் ஏதாவது ஒரு பேருந்து பின்னால் செல்ல வேண்டும். ஓட்டுநருக்கு சிரமமான சாலை. 

(தற்போது இந்தப் பேருந்து ஹைகிரவுண்ட் வருவதில்லை. சில நேரங்களில் தென்கலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது) .


33C - ஹைகிரவுண்ட் - மானூர் / மதவக்குறிச்சி

ஜங்ஷனில் இருந்து தாழையூத்து வழியாக நாஞ்சான்குளம், வெங்கலப்பொட்டல் கிராமங்களை கடந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் ரஸ்தாவில் இருந்து மானூர் வரை செல்லும் SBC பேருந்து. 

மதுரை நெடுஞ்சாலையையும், சங்கரன்கோவில் நெடுஞ்சாலையையும் இணைக்கும் ஒரே பேருந்து இது தான். மானூர் பகுதியில் இருப்பவர்கள் சங்கர் பாலிடெக்னிக் செல்ல ஏதுவான பேருந்து. ரஸ்தாவில் இருந்து மேற்கே மதவக்குறிச்சி கிராமம் வரை செல்லும். 

(தற்போது ஆண்டவர் விலாஸ் என்ற பெயரில் இயங்குகிறது. ஆனால் மானூர் செல்வதாக தெரியவில்லை). 

16 - நெல்லை சந்திப்பு - கொங்கராயங்குறிச்சி

 ஜங்ஷனில் இருந்த பாளை பஸ் ஸ்டாண்ட் , ஹைகிரவுண்ட், கேடிசி நகர், வல்லநாடு வழியாக கொங்கராயங்குறிச்சி செல்லும் SRS மற்றும் GMT பஸ்கள். 

வல்லநாடு வரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் செல்லும் இந்தப் பேருந்துகள். வல்லநாடுக்குப் பிறகு கிள்ளி குளம், மணக்கரை, ஆறாம் பண்ணை வழியாக கொங்கராயங்குறிச்சி செல்லும். இந்த சாலை வல்லநாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. கிள்ளி குளம் வேளாண்மை கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள் இவை. 

(தற்போது GMT பேருந்து இயங்கவில்லை. SRS உள்ளது, ஆனால் கொங்கராயங்குறிச்சி செல்கிறதா எனத் தெரியவில்லை). 


34 - நெல்லை சந்திப்பு - பாப்பாக்குடி

ஜங்ஷனில் இருந்து டவுண், பேட்டை, கல்லூரி, முக்கூடல் வழியாக பாப்பாக்குடி வரை செல்லும் SSMS பேருந்து. 

கல்லூர், முக்கூடல் போன்ற ஊர்களுக்கு நிறைய புறநகர் பேருந்துகள் இருந்தாலும் நடுவில் இருக்கும் சிறிய நிறுத்தங்களுக்கு ஆதாரமான பேருந்து. 

(இப்போது பாப்பாக்குடி வரை அதிகம் செல்வது இல்லை. சுத்தமல்லி விலக்கு வரை தான். அதுவும் மதிதா கல்லூரியை நம்பி) 

36B - நெல்லை சந்திப்பு - வீரவநல்லூர்

ஜங்ஷனில் இருந்து டவுண், பேட்டை, கல்லூர், சேரன்மகாதேவி வழியாக வீரவநல்லூர் வரை செல்லும் DPT பேருந்து. 

வீரவநல்லூரை பொறுத்தவரை நிறைய புறநகர் பேருந்துகள் உண்டு. பயணியர் ரயில் நிலையமும் இருப்பதால் இந்தப் பேருந்து வழியில் இருக்கும் ஊர்களில் வசதிக்கு மட்டுமே. 

(இந்தப் பேருந்து தற்போது ஸ்ரீமதி என்ற பெயரில் இயங்குகிறது). 

இவை போக மற்ற பேருந்துகள்

39A, மருத குளம் பேருந்து முன்பு TPC ராஜா தற்போது VSP (அகிலா) 



38 கோவை குளம் பேருந்து - முன்பு DANIEL இப்போது ராஜா புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. 

39B தெய்வநாயகப்பேரி - முன்பு DSR, தற்போது ராஜா. 

46 கீழப்பிள்ளையார் குளம் பேருந்து - SBC இன்று, Antony என்று இயங்குகிறது. 

இந்த (எங்க ஊர்) பேருந்து குறித்து.

https://markazhipani.blogspot.com/2020/04/sbc-46.html

32 கருங்குளம் பேருந்து - இப்போது வேணி இயங்குகிறது. 

16B கலியாவூர் பேருந்து - முன்பு KVV பிறகு சரவண பாலாஜி தற்போது வேறு பெயரில் இயங்குகிறது. 

37/11 பள்ளமடை பேருந்து - முன்பு DHANAPERINBAM, இப்போது ரெகோபாத் என்ற பெயரில் இயங்குகிறது. 

10/30 கோபாலசமுத்திரம் பேருந்து - முன்பு IMPERIEL, இப்போது வேணி பேருந்து இயங்குகிறது. 

15 மணப்படைவீடு பேருந்து - வேணி பேருந்து, இப்போது (சுந்தரி) ஹைகிரவுண்ட் வரை இயங்குகிறது. 

19 ஆழிக்குடி/அனவரதநல்லூர் - முன்பு ARG, இப்போது SMC - இயங்குவதாக தெரியவில்லை. 

23 நரசிங்கநல்லூர் / கருங்காடு பேருந்து- முன்பு DPT இப்போது SMC

35 அணைத்தலையூர் - முன்பு SRS, தற்போது வேணி

11A விட்டிலாபுரம் பேருந்து - இப்போதும் Andrews பேருந்து இயங்குகிறது

13 திருமலைகொழுந்துபுரம் பேருந்து- முன்பு SPM, இப்போது Andrews.


12 கீழப்பாட்டம் பேருந்து - இப்போதும் SPR என்ற பெயரில். 

12 நடுவக்குறிச்சி - முன்பு ARG, இப்போது பாலமிதுஷா என்ற பெயரில் இரண்டு வேணி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

36 சேரன்மகாதேவி பேருந்து - ADJ பேருந்து உள்ளது. DPR - ஸ்ரீமதியாக மாறியுள்ளது. 

11/52 - அய்யனார்குளம்பட்டி பேருந்து - இப்போதும் SGKR பேருந்து இயங்குகிறது. 

26 - சிவந்திபட்டி  - முன்பு JRT, இப்போது ஸ்ரீ ராமஜெயம் மற்றும் GNR என்ற பெயரில். 

நாரணம்மாள்புரம் பேருந்து - GMT பேருந்து இப்போது இல்லை. 

ஆழ்வார் கற்குளம் பேருந்து - இப்போது ராஜா வல்லநாடு வரை செல்கிறது. 

3/33 - நாஞ்சான்குளம் பேருந்து - அதே ANTONY என்ற பெயரில். 

9-பாப்பையாபுரம் / ராஜவில்லிபுரம் வேணி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.