Wednesday, 4 October 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 5 செழியநல்லூர்



தெற்கு செழியநல்லூர், எங்க வீட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள ஊர். அப்பா தலைமை ஆசிரியராக பணியாற்றியது செழியநல்லூரில் தான். அம்மா பிறந்த ஊர்.

என்னதான் செழியநல்லூரும் பிள்ளையார்குளமும் திருமண பந்தங்களால் இணைத்திருந்தாலும் இரு ஊர்களுக்கிடையே ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.பக்கத்து பக்கத்து ஊராய் இருந்தாலும் செழியநல்லூர் பஸ்ஸை கீழ்ப்பிள்ளையார்குளம் மக்களும் பிள்ளையார்குளம் பஸ்ஸை செழியநல்லூர் மக்களும் பொதுவாய் பயன்படுத்துவதில்லை.

நானும் சின்ன வயதில் மாடசாமியிடம் சொல்வேன், அந்தோணி பஸ்ஸை விட SBC தான் வேகமாக செல்லும் என்று.

செழியநல்லூரில் விவசாயம் பிரதானம் இல்லை.கல் குவாரிகள் இருந்ததால் பெரும்பாலானோர் ICL ல் வேலை செய்தனர்.செழியநல்லூரில் செல்வ செழிப்பு அதிகம்.

செழியநல்லூரில் நான் LKG முதல் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். LKG செல்லும் போது அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து பெரிய பையன்கள் நாலு பேர் என் கையை காலை பிடித்து குண்டுக்கட்டாக தூக்கி செல்வார்கள்.10 மணி ஆகிவிட்டால் ஊர் கிணற்று பக்கத்தில் ஒரு பறவை கத்தும்.அன்று LKG பள்ளிக்கூடம் செல்ல தேவை இல்லை. LKG மிஸ் அனுமதிப்பதில்லை.அப்பா பள்ளிக்கூடத்தில் இருந்து கொள்வேன்.
மூன்றாம் வகுப்பில் துணைக்கு யாரும் வராததால் மாடசாமி கோவில் ஓடையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் ஒத்தையடி பாதையில் கருவை மரங்களுக்கு நடுவில் செல்ல பயமாய் இருக்கும். ரெட்டை பனைமரத்தை தாண்டியதும் தான் பயம் கொஞ்சம் விலகும்.
மூன்றாம் வகுப்புக்கு பின் பின் செழியநல்லூருக்கு செல்வது குறைந்து விட்டது. யாராவது வேலி போட்டு அடைத்து விடுவார்கள், அடிக்கடி பாதை மாறும். தற்போது யாரும் வெளியிட முடியாத மாதிரி தார் சாலை.

செழியநல்லூரில் தாய்மாமக்கள் தவிர, அம்மாவுக்கு அண்ணன் தம்பி முறையில் நிறைய பேர் (மாமா) உண்டு.எனது தலைமுறையில் நிறைய மச்சான், மாப்பிள்ளைகள் உண்டு. கல்லூரி தோழன் சுள்ளான் முதல் கல்யாணத்துக்கு முன் கடைசி அறை தோழனான குமார் வரை எல்லாரும் மச்சான்கள் தான் .இப்போது செழியநல்லூர் பஸ் ஸ்டாண்டில் என்னை மற்றவர்களிடம் அடையாள படுத்த "இது பிள்ளையார்குளம்
முப்பிடாதி அக்கா மவன் என்றோ, வாத்தியார் மாமா மவன் என்றோ தான் சொல்வார்கள்.

செழியநல்லூரில் படித்தவர்களில் பலர் அப்பாவின் மாணாக்கர்கள் எனக்கு முதல் வேலை வாங்கி தந்த அர்ஜுன் அண்ணன் முதல் பழனி எப்படி இருக்கேரு என்று வாய் நிறைய சிரிப்புடன் கேட்கும் சிகையலங்கார நிபுணர் மாயாண்டி வரை.

என் முதல் சிநேகிதன், பால்ய சிநேகிதன் மஹாராஜனுக்கு செழியநல்லூரே.இப்போது பார்த்து கொண்டால் பால்யத்தின் நினைவுகளோடு சிரித்து கொள்வோம், அதிகம் பேசுவதில்லை.

வேலை கிடைத்து வேளச்சேரி வந்து 15 நாட்கள் இருந்த அறை ஒரு வேடந்தாங்கல்.அங்கு தான் சுரேஷ், மாடசாமி, குமார்,சண்முகவேல் (2), பேச்சி லிங்கம் இன்னும் பலர் பழக்கம்.அவர்கள் தான் எனக்கு சென்னையை பழக வைத்தவர்கள்.

வதன புத்தகம் வந்தபின் இரு ஊர்களுக்கு இடையே உள்ள பூசல் கூடி குறைந்துவிட்டது. தம்பி லெனினை நான் நேரில் பார்த்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் அவன் (மொக்கை) பதிவுகளை கடக்காமல் (லைக் இடாமல்) வதன புத்தகத்தில் செல்ல முடியவில்லை.


குமார் ஏதோ ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டான், ஜங்சனில் வந்து அதை வாங்க வண்டியில் வந்த மணி கிழக்க கூடி போகலாமா மேற்கே கூடி போகலாமா என்ற கேள்வியில் ஒரு ஊர் பூசல் போய்விட்டது.

No comments:

Post a Comment