Wednesday, 4 October 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 4 பங்குனி உத்திரம்



தென் மாவட்டங்களில் எல்லா குடும்பங்களுக்கும் ஒரு குல தெய்வ சாஸ்தா இருப்பார். பெரும்பாலும் சாஸ்தா கோவில்கள் ஆற்றோரம், குளத்தோரம், மலையடிவாரம் அடர்ந்த வனம் ஆகியவற்றில் தான் இருக்கும்.பங்குனி உத்திரம் தோறும் சாஸ்தா கோவிலுக்கு செல்வது வழக்கம்.

சாஸ்தா என்ற பெயர் மருவி "சாத்தா" ஆகி சாஸ்தா கோவில் "சாத்தாங்கோவில்" ஆகிவிட்டது. இதை பிற மதத்தவர் கிண்டல் கூட செய்வார்கள்.

சொக்காரர்கள் (பங்காளி) அனைவருக்கும் ஒரே சாஸ்தா தான். எங்க சாஸ்தா பசுங்கிளி ஐயன் சாஸ்தா. தாமிரபரணி கரையில் கருங்காட்டுக்கு நேரே தெற்கே கோபாலசமுத்திரத்தில் அருள் பாலிக்கிறார்.

எனது பெயர் கூட "பசுங்கிளி" என்ற பெயரில் உள்ள PSKயில் உருவானது என கேள்வி பட்டுள்ளேன்.

தாத்தா காலத்தில் பங்குனி உத்திரம் என்றால் வண்டி கட்டி இரண்டு நாள் முன்பாகவே சென்று விடுவார்களாம். கருங்காடு ஊரில் வண்டியை அவிழ்த்து விட்டு ஆற்றை கடந்து செல்வார்களாம். ஆற்றில் சுழல் அடிக்கடி உருவாகும், தண்ணீரும் அதிகமாய் செல்லும் இடம் அது.

அப்பா காலத்தில் கோபாலசமுத்திரம்- சுத்தமல்லி இடையே பாலம் போடப்பட்டு விட்டாலும் பேருந்து டவுன் வழியாக கருங்காட்டுக்கு மட்டுமே உண்டு. கருங்காடு பஸ் பஸ் அடிக்கடி வராமலும் நின்று விடும்.

ஒரு முறை ஜெயக்குமார் அண்ணன் தான் ஆற்றை கடந்து விட்டான். அன்று ஆற்றில் அதிகம் தண்ணீர் இல்லை.
திருமணத்துக்கு பின் ஒரு முறை தான் பங்குனி உத்திரத்துக்கு கோவிலுக்கு போக முடிந்தது. வாடகை வாகனத்தில் சென்றாலும் ஆத்து பாலத்தில் இருந்து கோவில் வரை நடக்க வேண்டி இருந்தது.

2007, ஏப்ரல் 1பங்குனி உத்திரம், எங்க ஊருக்கு கல்லூரி நண்பர்கள் எல்லாரும் வருவதாய் சொன்னார்கள். அப்போது என்னிடம் அலைபேசி கிடையாது. நண்பர்கள் குழாமில் டேனி மட்டுமே ரிலையன்ஸ் போன் வைத்திருந்தான். அதன் டவர் எங்க ஊர் வரை உண்டு. முருகனின் அலைபேசி எண்ணை டேனியிடம் கொடுத்து இருந்தேன், பங்குனி உத்திரம் என்பதால் அவர்கள் வருவதற்கு வேன் கிடைப்பதில் தாமதம். முத்து சங்கருக்கு மட்டுமே ஓரளவு வழி தெரியும்.

நண்பர்கள் வர லேட் ஆனதால் ஏப்ரல் 1 என்பதால் உன் நண்பர்கள் ஏமாற்றுவார்களோ? என்றாள் லவனக்கா.

ஒரு வழியாய் மதிய உணவுக்கு வந்து சேர்ந்தார்கள். தோட்டத்திற்கு போய் கிணற்றில் குதித்தோம் குளித்தோம். இளநீர் வெட்ட மாமா டைலர் சித்தப்பாவை கூட்டி வருவதற்குள் சன் குமாரும் ராஜாவும் இளநீர் பறித்து we are the boys என்று நிரூபித்தார்கள்.
அதற்கு பின் ஏதாவது அரட்டையில் எங்க ஊர்ல என்று நான் ஆரம்பித்தால் , டேனி முந்தி கொண்டு தம்பி உங்க ஊர் எனக்கு நல்லா தெரியும் என்பான்.

சென்னைக்கு வந்தபின் மற்றொரு பங்குனி உத்திர நாள் காலையில் ஊருக்கு சென்றேன். பிரபல ரவுடி கொலை காரணமாக எங்க ஊர் பஸ் ஓடவில்லை, சொற்ப பஸ்களே ஓடின. மானூர் வரை ஒரு பஸ்ஸில் சென்று அதற்கு பின் ஒரு குட்டியானையில் சாஸ்தா கோவில் செல்லும் குழுவோடு கிளம்பினேன். பள்ளமடை கால்வாய் பாலம் உடைந்து போயிருந்தது. கயிறு கட்டி இருந்தார்கள் கால்வாயை கடக்க.

கால்வாயை கடந்து ஊர் வரை நடந்தே சென்றேன். அம்மா தான் அதிகமாய் திட்டியது. போன் பண்ணி சொல்ல வேண்டியது தானா ? யாரையாவது வண்டி எடுத்துட்டு வர சொல்லிருப்பேன்லா ?

என் செல்போன் அதிகாலையிலே சுவிட்ச் ஆப் என்று நான் சொல்லவில்லை.

No comments:

Post a Comment