Wednesday, 27 September 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 3 அபுதாஹீர் - பீச் ஸ்டேஷன்



எத்தனையோ நண்பர்கள் இருக்கும் போது ஏன் அபுதாஹிரை தேர்வு செய்தேன்.
அபு ஒரு ஜாலி பேர்வழி யாரை கிண்டல் செய்வதென்றாலும் அவனால் முடியும்.நொறுக்கு தீனி என்றால் அவனுக்கு உயிர்.

கல்லூரி காலங்களில் கிரிக்கெட் போட்டி என்றால் விடுதி பக்கத்தில் இருக்கும் தாத்தா கடைக்கு போய் கிரிக்கெட்பார்ப்போம்.என்னிடம் காசு இல்லை என்றால் நிதியுதவி செய்வதில் சிங்கும் அபுவும் முக்கியமானவர்கள்.

சீனியர்களையும் அபு கிண்டல்செய்வான். சீனியர்கள் தூரத்தில் வரும் போது
பேரை சொல்லி கூப்பிடுவான். பக்கத்தில் வர, வர பேரோடு அண்ணனையும் சேர்த்து கொள்வான்.

எல்லா கிண்டல்களுக்கும் சேர்த்து வைத்து சீனியர்கள் ஒரு நாள் அபுவை மொத்தி விட்டார்கள். அடி வாங்கி திரும்பும் போது " என்னா அடி அடிக்கிறானுங்க" என்று சொல்லி கொண்டே வந்தான். அதை பார்த்த ஒரு ஜூனியர் பையன் கேட்டான், தேர்டு இயர் வந்த பிறகும் ராகிங்கா ?. இது ராகிங் இல்ல வாய் கொழுப்பில் வாங்கி கட்டுவது என்றோம் கோரஸ்ஸாக.

இறுதியாண்டு project சமயத்தில் சென்னையில் இருந்து ஊருக்கு முன்பதிவில்லாத ரயில் பயணம் செய்தோம். எங்களுக்கு அது மூன்றாம் முறை அபுவுக்கு மட்டும் முதல் முறை. சரியாக தூங்க முடியாது என்று சொல்லி இருந்தோம். நான் தூங்க மாட்டேன் தூங்க மாட்டேன் என்று சொல்லி கொண்டே வந்தான்.

ரயிலில் வந்த அத்தனை தின்பண்டங்களையும் வாங்கி திங்கவும் செய்தான். கொய்யாக்கா விற்கும் பாட்டி நடு பெட்டி வரை வந்து விட்டது. ஒரு கொய்யாக்காய் கூட விற்கவில்லை. அபு தான் போணி செய்தான்.

அடுத்த 15 நிமிடத்தில் அத்தனையும் விற்றுவிட்டது. அபுவுக்கு கடைசியாய் இருந்த ரெண்டு கொய்யாக்காய்களையும் இலவசமாய் கொடுத்து சென்றாள் அந்த பாட்டி.
உண்ட மயக்கத்தில் தூங்கியும் விட்டான் அபு. ரயில் பயணங்களில் எல்லாருக்கும் இருக்கும் மனநிலை, யாராவது ஒருத்தர் ஒரு பொருளை வாங்கி பார்த்தால் நாமும் வாங்குவோம் என்ற மனநிலை.

வேலை கிடைத்து சென்னை வந்த பின் அபுவும் சென்னைக்கு வந்தான். "அலைபாயுதே" மாதவன் போல் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றான். மெரீனா பீச்சுக்கு போகலாம் என்று முடிவு செய்து பீச் ஸ்டேஷன்க்கு டிக்கட் எடுத்து மின்சார ரயிலில் பீச் ஸ்டேஷன் சென்றோம்.

பீச் ஸ்டேஷனுக்கு வெளியே நின்ற ஷேர் ஆட்டோ மெரீனாவுக்கு போக கூப்பிட்டான். பக்கத்துல இருக்குற பீச்க்கு ஷேர் ஆட்டோவா என்று நடக்க ஆரம்பித்தோம்.
ரொம்ப தூரம் நடந்த பின் நேப்பியர் பாலம் என் கண்ணில் பட்டது. பீச்சுக்கு இன்னும் ரொம்ப தூரம்டா, பீச் ஸ்டேஷன் சம்மந்தம் எடத்துல இருக்கு என்றேன். (நான் அதற்கு முன் ஒரு முறை வேளச்சேரியில் இருந்து பாரிஸ் போயிருக்கிறேன்).

கொஞ்ச நேரம் கழித்து, வழியில் வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினோம் மெரீனா செல்ல. ஷேர் ஆட்டோ டிரைவர், 15 நிமிசத்துக்கு முன்னாடி பீச் ஸ்டேஷன்ல வச்சு கூப்பிட்டேன் அப்பவே வந்திருக்கலாம் என்றார்.


எல்லார் முகத்திலும் நமுட்டு சிரிப்பு.நேப்பியர் பாலம் கடக்கும் போது அபு கேட்டான், இது தான "ஆயுத எழுத்து" பாலம் என்று.

No comments:

Post a Comment