தாத்தா
வெற்றிலையை மறக்க
பீடியை கையில் எடுத்தார்!
ஊர் கடைகளில்
சொக்கலால் பீடி
அவருக்கென இருக்கும்!
இப்போது சொக்கலால்
பீடி இருக்கா என்று
தெரியவில்லை!
தாத்தாவின் நினைவுகளோடு
சொக்கலாலும் இருக்கிறார்!!!
****
அப்பா
துடுப்பாட்டம் இதழில்
எழுதுவதால் சமூக வலைதள
நண்பர்கள் ஆசிரியர் என
என்னை அழைக்கிறார்கள்!
ஆசிரியரின் மகனுக்கு
இதைவிட பெருமை
என்ன உள்ளது!!!
****
மனைவி
அலைபேசியில் சமையல்
குறிப்பு ஒலிக்க
அசந்து தூங்கும்
அவள் புன்முறுவல்
பூக்கிறாள்!
அநேகமாக வாணலியில்
வழங்கும் வெங்காய பதம்
காரணமாக இருக்கலாம்!
அவ்வளவு சுருங்கிவிட்டது
அவளின் உலகம்!!!
****
அம்மா
இந்த ஆண்டு 40ஐ
தொடப்போகிறேன்
திருவிழாவில் குச்சி ஐஸ்
வாங்கி சாப்பிடும்போது
அம்மா வந்து
அடிப்பாளோ என்ற
பயத்துடனே!!!
****
மகள்
புதிய பள்ளி என்று
ஆர்வமுடன் சென்ற
மகளுக்கு சனிக்கிழமை
வேலைநாள் இருப்பது
பிடிக்கவில்லை!
வீட்டில் அவள்
வைத்திருக்கும் பள்ளியில்
ஏழு நாளும் வேலைநாள்!
எதுவும் தெரியாமல்
அடி வாங்கும் ஒற்றை
மக்கு மாணவன் நான்!!!
****
நண்பன்
வேலைப்பளு,
மனைவி மீதான கோபம்,
கோவில்களின் வரலாறு,
மகள்களின் நடனம்,
சென்ற இடங்கள்,
பார்த்த படங்கள்
எல்லாவற்றையும்
பகிர்கிறான் வாட்ஸ்அப்
ஸ்டேட்டஸ் வாயிலாக!!!
****
ஆச்சி
அவித்த உருளைக்கிழங்கை
குழம்பில் போடுவதற்கு முன்
எனக்கென இரண்டு துண்டுகள்
வைத்திருப்பாள் !
திருவிழா நாளில்
எனக்கு தர முந்தியில்
காசு முடிந்திருப்பாள்!
இன்னும் கொஞ்சம் காலம்
இருந்திருந்தால்
என் மகளுக்கு காட்டி
இருப்பேன் பாம்படம்
அணிந்து வெள்ளந்தி
சிரிப்போடு இருக்கும்
பூட்டி ஆச்சியை!!!
நினைவுகள் தான் வாழ்க்கை, வாழும் போதும், வாழ்ந்த பின்னும்.
ReplyDelete