திருநெல்வேலியில் மக்கள் பொதுப் போக்குவரத்து சாதனங்களைக் குறைத்து விட்டார்களா?
திருநெல்வேலியில் பரவலாக மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது.

நிறைய கிராமங்களுக்கு சென்ற தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. எந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன என பார்ப்போம்.
1. கீழநந்தம் மேலூர் வழியாக மணப்படைவீடு சென்ற பேருந்துகள்.
2. என்ஜிஓ காலனி வழியாக கோவைகுளம் சென்ற பேருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்கிறது.
3. ஆழ்வார்கற்குளம் பேருந்து வல்லநாடு வரை மட்டுமே செல்கிறது. கொங்கராயங்குறிச்சி பேருந்து பற்றித் தெரியவில்லை.
4. சங்கரன்கோவில் சாலை மற்றும் மதுரை சாலையை இணைத்த ஒரே பேருந்தான மதவக்குறிச்சி / மானூர் பேருந்து, ஹைகிரவுண்ட் மட்டுமே செல்கிறது.
5. நரசிங்கநல்லூர் / கருங்காடு பேருந்து சுத்தமல்லி விலக்கு வரை மட்டுமே செல்கிறது.
6. பாப்பாக்குடி பேருந்து முக்கூடல் வரை செல்கிறது. சேரன்மகாதேவி பேருந்துகள் பெரும்பாலும் சுத்தமல்லி விலக்கு வரை செல்கின்றன.
7. டவுண் - மேலப்பாளையம், குறுக்குத்துறை வழிப் பேருந்து, நாரணம்மாள்புரம் பேருந்து, கோபாலசமுத்திரம் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டன.
8. வெள்ளாளன்குளம் பேருந்து ராணி அண்ணா கல்லூரி வரை செல்லலாம். சங்கர் நகர் வரை சென்ற பேருந்துகள் நிறைய நிறுத்தப்பட்டுவிட்டன.
தனியார் பேருந்துகளுக்கு இந்த நிலை என்றால் அரசுப் பேருந்துகள் நிலை. அரசுப் பேருந்துகள் கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. சில கிராமங்களில் ஞாயிறு விடுப்பு, சில நடைகள் நிறுத்தமும் உள்ளது. நகர்புறத்தில் என்ஜிஓ காலனிக்கு 5பி, 5ஈ, 5எச், 5ஜி, 5எல், 5எஸ்/வி என இயக்கப்பட்ட பேருந்துகள் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
அதற்காக அரசுப் பேருந்துகளின் தடம் எண் மாற்றப்பட்டுள்ளது. தாழையூத்தில் இருந்து ராஜவில்லிபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தடம் எண் 9. அந்தப் பேருந்து நிறுத்தம் கூட 9 ஸ்டாப் என்பது தான். ஆனால் இப்போது தாழையூத்து மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளின் தடம் எண் 9 (33 தென்கலம் மார்க்கம், 35 கங்கை கொண்டான் மார்க்கம் என்பது கிடையாது). அதே போல் மானூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தின் தடம் எண் 4.
ஜங்ஷன் பேருந்து நிலையம் கட்ட தாமதம் ஆனதால் மக்கள் ஜங்ஷன் பயன்பாட்டை மறந்தே விட்டனர். ரயில் நிலையம் மட்டுமே ஜங்ஷனாக இருந்தது. கட்டிய பேருந்து நிலையமும், பேருந்து நிலையம் போல இல்லாமல் பேருந்து நிறுத்தம் போலவே உள்ளது.
ஜங்ஷன் இப்படி என்றால் பாளை பேருந்து நிலையத்தின் நிலைமை பரிதாபம். பாளை பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்றதால் அனைத்து ஹைகிரவுண்ட் பேருந்துகளும் மார்க்கட் வழியில் மாற்றி விடப்பட்டன. தனியார் பேருந்துகளுக்கு சமாதானபுரத்தில் ஓரளவு ஏறக்கூடிய ஆட்கள் இருந்ததால் வசதியாகப் போனது. பாளை பேருந்து நிலையம் திறந்த பிறகும் பேருந்துகள் மார்க்கட் வழியிலே செல்கின்றன. போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளதா அல்லது தகுந்த முறையில் "கவனித்து" இயக்குகிறார்களா என்று தெரியவில்லை.
சாராள் டக்கர், கான்வென்ட் பள்ளிகளுக்குச் செல்ல பேருந்துகள் போதுமான அளவு இல்லை. சவேரியார் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துகளே இல்லை என்பது தான் இன்றைய நிலை. புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் சில பாளை பேருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. ஆனால் இவை ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குள் வருவது இல்லை.
ஜங்ஷன் பேருந்து நிலையம் திறந்த பிறகும் ஏன் ரயில் நிலையத்திற்குப் பேருந்து இயக்கப்படுகிறது என்பது புரியாத புதிர்.
சொந்த வாகனப் பயன்பாடு மற்றும் பேருந்து இயக்கத்தில் உள்ள குழப்பங்கள் திருநெல்வேலி மக்களைப் பேருந்து பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. அதே சமயம் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இது மாபெரும் தலைவலி.
No comments:
Post a Comment