அதிகாலை ஐந்து மணிக்கு
மணியடிக்கும்.
அவசர குளியல் போட்டு
அலங்காரம் செய்துவிட்டு
ஆறு மணி ஜெபகூடுகையில்
நிற்க வேண்டும் !
படிப்பு நேரம்,
தேனீர் நேரம்,
படிப்பு நேரம்,
காலை உணவு !
பள்ளி முடிந்ததும்
காபியும் வடையும் !
விருப்பம் இருந்தால்
மாலை ஆறு மணி வரை
விளையாடி கொள்ளலாம் !
ஆறு முதல் ஏழரை படிப்பு நேரம்
எட்டு வரை இரவு உணவு !
ஒன்பதரை வரை
படிப்பு நேரம் !
உறங்கி வழியும்
கண்களோடு ஜெப கூடுகை !
பத்து மணிக்கு விளக்குகள்
அணைக்கப்படும் !
கட்டாய தூக்க நேரத்தில்
வீட்டை நினைத்து
விசும்பல்கள் கேட்கும் !
தம்பி தங்கை என
உறக்கத்தில் உளறல்கள்
கேட்கும் !
மீன் தொட்டியில்
வண்ண மீன்கள் கிடக்கும்,
எங்களை போல போட்டதை
தின்று கொண்டு !
வெள்ளை சீருடை சட்டையும்
பள்ளி முத்திரை பதித்த
பனியன்களும் அடிக்கடி
காணாமல் போகும் !
ஞாயிற்றுக்கிழமை மரத்தடியில்
குடும்ப உறுப்பினர்களோடு
அரைமணி நேரமோ
ஒரு மணி நேரமோ
வாய் நிறைய சிரிப்பு வாய்க்கும் !
அதிகாலையில் ஒலிக்கும்
அப்பா பிதாவே பாடல்
எரிச்சலூட்டும் !
ஊருக்கு செல்லும் நாளில்
உற்சாகமாக உரக்க
கத்தும் சந்தோசம் பொங்குதே
பாடல் இனிக்கும் !
வாரம் ஒருமுறை மூன்று
மணி நேரம் வெளியே
செல்ல அனுமதி !
பண்டத்தை மட்டுமல்ல
சோகத்தையும் பகிர்ந்து
கொள்வோம் !
கிரிக்கெட், ரசிக சண்டைகள்,
நட்பு குழுக்கள், பட்டப் பெயர்கள்,
வார்டனிடம் வாங்கிய அடி
...
மீண்டும் செல்ல முடியாத
வண்ணமயமான நாட்கள் அது !!!
No comments:
Post a Comment