ஆயிரம் சண்டைகள் இருந்தாலும்
அவர் என் அப்பாவின் தம்பி !
எனக்கு முதன் முதலாக
நீந்த சொல்லி தந்தவர் !
எனக்கு முதன் முதலாக
வண்டி ஓட்ட கற்று தந்தவர் !
விடுதியில் சேர செல்கையில்
வேட்டியை மடித்து கட்டி
ட்ரெங்கு பெட்டியை தோளிலும்
ஈய வாளியை கையிலும்
தூக்கி வந்தவர் !
சாலை விபத்தில்
சாமியாகிவிட்ட சம்சாரி !
எங்களை விட்டு எங்கும்
போகமாட்டார்,
ஐப்பசி மாச மழையில்லை
என்றால் வரப்பில் இருந்து
வருத்தப்படுவார் !
கத்திரியில் புழு வந்து விட்டால்
கவலைப்படுவார் !
அதிகம் படிக்காதவர்
அடுத்த தலைமுறைக்கு
தலைக்கவசத்தின் அவசியத்தை
உணர்த்தி சென்றிருக்கிறார் !
எங்கள் ஊர் விலக்கில்
இனியொரு விபத்து நிகழாமல்
காவல் தெய்வமாய்
வீற்றிருப்பார் !!!
No comments:
Post a Comment