Tuesday, 26 September 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 1

அப்பா

என் கையெழுத்தை நிறைய பேர் நன்றாக இருக்கிறது என்பார்கள். கையெழுத்தை இத்தனை நன்றாக மாற்றியது என் அப்பா.

மா.சுப்பையா, "மாசு" என்று கையெழுத்திடும்அவர் ஒரு மாசில்லா மனிதர்.
மூன்றாம் வகுப்பு வரை என் கையெழுத்து மோசமாகத்தான் இருந்தது. அப்பாவின்
அறிவுரைகளின்படி திருத்தி எழுதினேன். நல்ல கையெழுத்து கிடைத்தது. ஆனால் தலையெழுத்து சற்றே மாறியது. மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் அப்பா இல்லை.


அப்பாவை ஆசிரியராகவும் விவசாயியாகவும் பார்த்துள்ளேன்.அப்பாவுக்கு சினிமாவும் பிடிக்கும்.எங்க ஊருக்கு முதல் முறையாய் டேப் ரெக்கார்டர் வைத்த பஸ் விட்டபோது "வா முனிம்மா " பாடல் போட்டதாக அப்பா சொன்னது இன்றும் என் நினைவில்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது CD பிளேயர் வைத்த பஸ் விட்டபோது "ஐ லவ் யூடா" பட பாடல் போட்டார்கள். இரண்டுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

எங்கள் வீட்டில் இன்றும் ஓடும் உஷா பேன் நான் பிறந்த போது அப்பா வாங்கியது.
எனக்காக எத்தனையோ சிறப்பம்சங்கள்(அக்காகளுக்கு இல்லாத) வீட்டில் உண்டு. குட்டியாய் தலையணை, குட்டியாய் டேபிள் பேன்.நான் சாரம் கட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சாரத்தை (லுங்கி) இரண்டாய் வெட்டி தைத்து தந்தது அப்பா தான்.

அப்பாவுக்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தால் எதுவும் செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது.எப்போது பெயர் எழுதினாலும் S பழனி செல்வகுமார் என்றே எழுதுவேன், எந்தையை முன்னிலை படுத்தி.
1994 மார்ச் 7ம் தேதி அரைகுறையாய் நினைவில் உள்ளது. அம்மா, அக்காவை (லவனக்கா) ஸ்கூலில் கொண்டு போய் விட்டு வர சேது மாமாவை கூட்டி வர சொன்னாள். நானும் சேது மாமாவும் சைக்கிளில் செழியநல்லூரில் இருந்து வந்து கொண்டிருந்தோம். எங்க வீட்டு முன்னால் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.பாப்பா ஆச்சி வாயை பொத்தி கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு" என்று சேது மாமா கேட்டதற்கு "கார் வந்து திரும்புறதுக்குள்ள சீவன் போயிருச்சியா" என்றாள்.சேது மாமா அதிர்ச்சியில் சைக்கிளை விட்டு இறங்கி விட்டார்.

எட்டு வயதான எனக்கு எந்த அதிர்ச்சியும் தாக்கவில்லை.அன்று போட்டு கொண்ட என் மொட்டை தலையை பார்த்து வெள்ளை புடவையில் இருந்த அம்மா அழுத அழுகை இன்றும் என் நெஞ்சில்.

அப்பா என்னை /எங்களை விட்டு எங்கும் சென்று விடவில்லை. என் கையை பிடித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் கூட்டி சென்றார்.எனது இண்டர்வீயூகளில் உடனிருந்தார்.என் திருமணத்தில் ஆசி வழங்கினார்.


என்றும் என் பயணத்தில் என் கையை பிடித்து உடன் வருவார்.நான் கும்பிடும் சாமியாய் .

No comments:

Post a Comment